நூல் அறிமுகம் - ஜி.மஞ்சுளா
தோழர் அ.கா.ஈஸ்வரன் மார்க்சியத்தை வகுப்புகளாக எடுத்ததும், சில கட்டுரைகளும் இணைத்து 'கம்யூனிசம் கற்போம்' என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக நூல்கள் வெளிவந்துள்ளன.
இந்நூல்களில் தோழர் அ.கா.ஈஸ்வரனின் தெளிவான எழுத்தும், தொகுப்பும் மார்க்சியம் பற்றிய சரியான புரிதலை நமக்கு தருகின்றன. அதோடு, நாம் பெற்ற சரியான புரிதலை, பல்வேறு கருத்து மோதல்கள் இருக்கும் இன்றைய சூழலிலும் தயக்கமின்றி வெளிப்படுத்துவதற்கான துணிச்சலையும், பலத்தையும் சேர்த்தே நமக்களிக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான எழுத்துக்களாகவும் அவை உள்ளன.
இந்நூலின் முதல் தொகுதியின் முதல் தலைப்பு 'லெனின் எழுதிய ' மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்' என்பதாகும். தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம் ஆகிய உப தலைப்புக்களின் கீழ் மார்க்சியத்தின் உள்ளடக்கம் விளக்கப்பட்டுள்ளது.
இதில் மார்க்சியத்தின் தத்துவமான 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' (Dialectical materialism) என்பது என்ன? யார் முழுமையான பொருள்முதல்வாதிகள் (materialist) என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் லெனினின் எழுத்துகளில் இருந்து தோழர் அ.கா.ஈஸ்வரன் எடுத்து எழுதியுள்ளார்.
மார்க்சியத்தின் தத்துவம் 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்'. இதை நாம் சரியாக புரிந்து கொண்டிருக்கிறோமா? நாத்திகவாதிகள் அதாவது கடவுள் மறுப்பாளர்கள் அனைவருமே முழுமையான பொருள்முதல்வாதிகள் (materialist) என்பதான தவறான புரிதல் நம்மில் பலருக்கு இருக்கிறது.
ஆனால் அவர்கள்
முழுமையான பொருள்முதல்வாதிகள் அல்ல. மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதம் (materialism) அனைத்தும் கருத்துமுதல்வாதம் (idealism) தான். எப்படி? அதை தான்
இந்நூல் சிறப்பாக விளக்குகிறது.
மார்க்சுக்கு முன்பான பொருள் முதல்வாதிகள் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை ஏற்க மறுத்து, கடவுள் இல்லை என்றனர். இயற்கையே முதன்மை. அதாவது பிரபஞ்சம் இருக்கிறது. அதில் மாற்றங்கள் நிகழ்கிறது என்றும் கூறினர். அந்த விதத்தில் பொருள்முதல்வாதிகளாக அவர்கள் இருந்தாலும், இயக்கம் என்பது சமூகத்திலும் நடைபெறுகிறது என்பதை காணத் தவறினர்.
மார்க்ஸ் தான் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தை வரலாற்றுக்கு பயன்படுத்தினார். இது வரலாற்று பொருள்முதல்வாதம்(historical materilalism) எனப்படும். மேலும், ஒரு சமூக அமைப்பில் இருந்து மற்றொரு சமூக அமைப்பிற்கு மாறுவதற்கு, 'உற்பத்தி சக்திகளின்' வளர்ச்சியே காரணம் என்பதையும் விளக்கினார்.
மார்க்சுக்கு முன்பான பொருள் முதல்வாதம் கூட சமூகத்தை கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தில் தான் அணுகியது. அதனால் மார்க்சுக்கு முந்தைய பொருள்முதல்வாதிகள் முழுமையான பொருள்முதல்வாதிகள் அல்ல. ஒருவகையில் அவர்களும் கருத்து முதல்வாதிகள் (idealist) தான்.
இவ்வாறு தத்துவத்தில் நாம் அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டியதையும் பழைய குறைபாடுள்ள பொருள்முதல்வாதத்தில் இருந்து மார்க்சியம் எங்கு வேறுபடுகிறது. மார்க்சின் பங்களிப்பான வரலாற்று பொருள் முதல்வாதம் ஆகியவை குறித்து சிறப்பாக இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பல சீர்திருத்தவாதிகள் அடிப்படையில் மார்க்சிய தத்துவத்தில் இருந்து வேறுபடும் இடம் வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டம் தான் என்பதும், ஒருவகையில் அவர்களும் கருத்துமுதல்வாதிகளே(idealist) என்பதும் இதிலிருந்து நாம் தெட்டத் தெளிவாக தெரிந்து கொள்கிறோம்.
மார்க்சிய தத்துவத்தை பிழையின்றி புரிந்துக் கொள்ள தோழர் அ.கா.ஈஸ்வரனின் எழுத்துக்கள் நமக்கு கற்பிக்கின்றன.
வெளியீடு - பொன்னுலகம் புத்தக நிலையம்.



No comments:
Post a Comment